ஓபிஎஸ் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதையறிந்து வேதனைக்குள்ளானேன்- சொல்கிறார் சரத்குமார்
முதல்வர் ஓபிஎஸின் மீது சமத்துவ மக்கள் கட்சிக்கு நம்பிக்கை உள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதை அறிந்து வேதனைப்பட்டேன் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தமிழக அரசியலில் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. முதல்வர் ஓபிஎஸ்க்கு பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சசிகலா அணியில் இருந்து அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் அவரது அணி பலம்பெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அதிமுக கூட்டணிக் கட்சிகளும் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சமத்துவ மக்கள் கட்சி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் சரத்துகுமார் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.
சரத்குமார் விடுத்துள்ள அறிக்கை
எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு அவரது வழிகாட்டுதலில் அஇஅதிமுக என்ற பேரியக்கம், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு வழிகளில் உழைத்த இயக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லலை. அந்த இயக்கத்தின் தற்போதைய நிலையை குறித்த எனது வருத்தத்தை முன்னர் பதிவிட்டு இருந்தேன்.
வேதனைக்குள்ளானேன்
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், பொறுப்பேற்ற முதல்நாள் முதல் உண்மையாக தமிழரின் நலனுக்காக உழைத்த பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார் என்றறிந்து வேதனைக்குள்ளானேன் என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.
முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
பன்னீர்செல்வத்தின் விசுவாசத்தையும் உழைப்பையுட் நேரில் பார்த்த அனுபவத்தினாலும் அவர் திறமையில் உள்ள நம்பிக்கையினாலும் எங்கள் இயக்க சகோதரர்களின் விருப்பத்திற்கும் வேண்டுகோளிற்கும் மதிப்பளித்து சமத்து மக்கள் கட்சியின் சார்பிலும் எனது சார்பிலு முதலமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சி அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.