நிறைவாக வாழ்பவன்.. திமுகவிலிருந்து விலகல் என்பது வடி கட்டிய பொய்: துரைமுருகன்
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் துரை முருகன் திமுகவில் இருந்து விலகி விட்டதாக நேற்று தகவல் பரவியது. ஆனால், அது வெறும் வதந்தி என துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை கருணாநிதியை வீட்டில் சந்தித்த துரைமுருகன், தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை தந்ததாக செய்தி பரவியது. ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்க கருணாநிதி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நேற்றிரவு வேலூரில் இருந்து கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டிற்கு வந்தார் துரைமுருகப். அப்போது அவரிடம் ராஜினாமா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது -
திமுகவில் இருந்து என்னை பிரிக்க முடியாது. மரணம் மட்டுமே பிரிக்கும். யாரோ என்னை பற்றி இது போன்ற தவறான வதந்தியை பரப்பியுள்ளனர். யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்கள் என்ன லாபம் அடைந்தார்கள் என்பது தெரியவில்லை. வேலூரில் கட்சிப் பணிகள் முடித்து விட்டு தற்போது தான் சென்னை வந்துள்ளேன்" என்றார்.
துரை முருகனின் இந்த விளக்கத்தால் அவரது ராஜினாமா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.
ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்...
இந்நிலையில் இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
திராவிட முன்னேற்றக் கழகத்தின், துணைப் பொதுச் செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டதாக - தவறான - ஜமக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய்யை, ஒரு செய்தியாக ஆக்கி சில பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டிருப்பதைப் பார்த்து நான ஆச்சரியப்பட்டுப் போனேன்.
நேற்று நான் வேலூருக்குச் சென்று, நாளைக்கு எங்கள் மாவட்டத்தில் யார் யார் என்ன பதவிக்கு விண்ணப்பிப்பது என்பதைக் கழகத் தோழர்களோடு விவாதித்து ஒழுங்கு செய்து கொண்டிருந்த போதே சில பத்திரிகை நிருபர்கள் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு இப்படியொரு செய்தி உலவுகிறதே என்று கேட்ட போது அதைத் திட்டவட்டமாக மறுத்து பதிலளித்தேன்.
நேற்றிரவு சுமார் 10 மணி அளவுக்கு சென்னைக்குத் திரும்பிய போது என் வீட்டு வாசலிலே நின்றிருந்த சில தொலைக்காட்சியினரிடமும் "இது அப்பட்டமான பொய்; யாரோ சில விஷமிகள் இதைத் திட்டமிட்டு பரப்பியிருக்கிறார்கள்" என்று பேட்டி கொடுத்தேன். ஆனால் இன்று காலையில் எந்தெந்த பத்திரிகை நிருபர்கள் என்னோடு பேசினார்களோ, அதே பத்திரிகைகளில் நான் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக செய்தி வெளியிட்டிருப்பது கண்டு, தமிழ்நாட்டில் நிலவும் பத்திரிகா தர்மத்தை என்ன சொல்வது?
நான் முறையாக கட்சியில் வளர்ந்தவன். நிறை வாழ்க்கையோடு வாழ்ந்து வருபவன். 1954ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் உறுப்பினராக இருப்பவன். 50 ஆண்டுகளாக தலைவர் கலைஞரின் அடியொற்றி நிற்பவன். கழகத்தின் மீது அடித்த எந்தப் புயலிலும் காணாமல் போகாமல் இருப்பவன். நான் வெறும் அரசியல் வாதி அல்ல; திராவிட இயக்கத்தின் கொள்கையின் மீது பற்று கொண்டவன். இப்படிப்பட்ட என் மீது நான் செய்யாத ஒன்றை செய்து விட்டதாகக் கற்பனையில் ஒரு செய்தியை உருவாக்கி நான் விளக்கம் தந்த பிறகும், பத்திரிகைகள் வெளியிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிருக்கிறேன்.
தி.மு.க. தான் என்றும் என் கட்சி, தலைவர் கலைஞர் தான் என்றும் என் தலைவர் தளபதி ஸ்டாலின் எங்கள் வழிகாட்டி இது தான் என் முடிவு! கட்சியிலிருந்து விலகல் என்பது என்றும் நடக்காது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications