ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள்... மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்ற வருமான வரித்துறையினர்!
போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களை மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனர்.
Recommended Video
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் ஜெயலலிதாவிற்கு கட்சியினர் அனுப்பிய கடிதங்களை மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றுள்ளனர்.
ஜெயலலிதாவிற்கு எந்த அளவிற்கு கம்பீரம் இருக்குமோ அந்த அளவிற்கு போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திற்கும் கம்பீரம் உண்டு. ஜெயலலிதாவின் இரும்புக் கோட்டையாக இருந்த இந்த வீட்டிற்குள் 21 ஆண்டிற்குப் பிறகு வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர்.
அதிகார மையங்களாக இருந்த ஜெயலலிதாவும் உயிருடன் இல்லை, இரண்டாவது அதிகார மையமான சசிகலாவும் சிறையில் இருக்கிறார். இத்தகைய சூழலில் தான் வருமான வரித்துறையினர் வேதா இல்லத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
போயஸ் கார்டனில் சோதனை
மாலை 4.30 மணிக்கெல்லாம் அதிகாரிகள் உள்ளே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் மீடியாக்களின் வெளிச்சத்திற்கு ரெய்டு நள்ளிரவில் தான் வந்தது. மாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை அதிகாரிகளின் சோதனை நீடித்திருக்கிறது.
தோண்டித் துருவிய அதிகாரிகள்
இளவரசியின் மகள் ஷகீலா முன்னிலையில் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், சசிகலா அறைகளை வருமான வரித்துறையினர் சல்லடை போட்டு சளித்துள்ளனர். இந்த சோதனையின் போது ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களை சசிகலா அறையில் இருந்து வருமான வரி அதிகாரிகள் அள்ளிச் சென்றுள்ளனர். சுமார் 5க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இந்த கடிதங்களை வருமான வரித்துறையினர் அள்ளிச் சென்றுள்ளனர்.
கட்சியினர் அனுப்பிய கடிதங்கள்
ஜெயலலிதாவின் கடித போக்குவரத்தை சசிகலா தான் படித்து அவரிடம் சொல்லி வந்ததாக சசிகலாவே தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்நிலையில் கட்சியினர் தங்களின் தலைவருக்கு அனுப்பிய கடிதங்களை ஏன் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்சியை பலவீனம் செய்வதா திட்டம்
வருமான வரித்துறையினர் ஆவணங்களை சரி பார்க்க வேண்டுமே தவிர ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களை ஏன் சரிபார்க்கின்றனர். இது கட்சி சார்ந்த செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள், பிரமுகர்கள் எழுதியிருக்கக்கூடும் நிலையில் கட்சியை பலவீனம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக மத்திய அரசு வருமான வரி அதிகாரிகளை வைத்து இந்த கடிதங்களை அள்ளிச் சென்றுள்ளனரா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.