ஒகேனக்கல் பரிசல் விபத்து: 5 நாட்களுக்குப் பின் குழந்தை உடல் மீட்பு
சென்னை: ஒகேனக்கல் பரிசல் விபத்தில் சிக்கி உயிரிழந்த பத்து மாத குழந்தை சுபிக்ஷாவின் உடல் ஐந்து நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. மீன்கள் தின்ற நிலையில் உப்பிய நிலையில் கிடைத்த அந்த உடல் காண்பவர்களை பதறச் செய்திருக்கிறது.
திருமண நாள் கொண்டாடுவதற்காக கடந்த 30ம் தேதி சென்னை தியாகராய நகரிலிருந்து ஒகேனக்கல் அருவி பகுதிக்கு ராஜேஷ் - கோமதி குடும்பத்தினர் உறவினர்களுடன் சுற்றுலா சென்றனர். குழந்தைகள் சச்சின், தர்ஷன், மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் கெளரி, மைத்துனர் ரஞ்சித் அவரது மனைவி கோகிலா, அவரது பத்து மாத குழந்தை சுபிக்ஷா ஆகியோர் பரிசலில் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்றுநீர் சுழற்சியில் பரிசல் சிக்கி கவிழ்ந்தது.

இதில் ராஜேஷ், அவருடைய மனைவி கோமதி, அவர்களது மகன் சச்சின், பரிசல் ஓட்டி கஜாமுருகேசன் ஆகிய 4 பேர் உயிர் தப்பினர். கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி கௌரி, மகன் ரஞ்சித், அவரது மனைவி கோகிலா, 10 மாத குழந்தை சுபிக்ஷா, ராஜேஷ் மகன் தர்ஷன் ஆகிய 6 பேர் பலியானார்கள்.
இதில் குழந்தை சுபிக்ஷா தவிர மற்ற 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. விபத்தை தொடர்ந்து பரிசல் ஓட்டி கஜா முருகேசனை போலீசார் கைது செய்தனர். காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது.
கடந்த 4 நாட்களாக குழந்தை சுபிக்ஷாவின் உடலை தேடும் பணியில், 100 பரிசல்களில் 10 குழுவினர் ஈடுபட்டனர். 5வது நாளான நேற்று மாலை பரிசல் கவிழ்ந்த இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் குழந்தையின் உடல் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மீன்கள் தின்ற கண்கள், உப்பிய உடல் என அந்த பிஞ்சுக்குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அந்த உடலைக்காண்பவர்களை பதைபதைக்க வைத்தது. மீட்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications