தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஹைகோர்ட் தடை- வைகோ வழக்கில் உத்தரவு
மதுரை: தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. மதிமுக பொதுசெயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தத் திட்டத்திற்கு தடைவிதிக்கக்கோரி மதிமுக செயலாளர் வைகோ உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தனது மனுவில், ‘நியூட்ரினோ ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டால், நீர், நிலம், காற்று ஆகியவை பாதிக்கப்பட்டு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்தப்பகுதியை சுற்றியுள்ள அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும்' என வைகோ தெரிவித்திருந்தார்.

மேலும், இந்தத் திட்டத்தால் வனவிலங்குகள் மற்றும் விவசாயமும் பாதிக்கப் படும் எனவும் தனது மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த ஆய்வு மையத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்றும் தனது மனுவில் அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறும் வரை ஆய்வுப்பணிகளை தொடரக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications