நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் கமிட்டி இன்று 2ம் கட்ட விசாரணை
சென்னை : பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி விசாரணை முடிவடைந்த நிலையில், ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் இரண்டாம் கட்ட விசாரணையைத் துவக்கி உள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம், மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு அழைப்பு விடுத்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.

இதுதொடர்பாக நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாக நிர்மலாதேவியிடம் கடந்த ஐந்து நாட்களாக சிபிசிஐடி எஸ்பி ராஜேஷ்வரி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்த விசாரணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நிர்மலாதேவி இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இவரை மேலும் சில நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து உள்ளார். ஏற்கனவே, முதற்கட்ட விசாரணையை முடித்துள்ள அதிகாரி சந்தானம், இன்று இரண்டாம் கட்ட விசாரணையைத் துவக்கி உள்ளார்.
இதில், நிர்மலா தேவியுடன் தொடர்புடைய மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் குறித்து அவர் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவிப் பேராசிரியர் முருகனிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் நேற்று அவரைக் கைதுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications