ப.சி.க்கு சிக்கல் ஏற்படுத்திய ஐஎன்எக்ஸ் மீடியா ஓனர் யார் தெரியுமா?
ப.சிதம்பரத்திற்கு சிபிஐ ரெய்டு மூலம் தலைவலி ஏற்பட காரணமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம்ஷீனா போரா கொலை வழக்கில் சிக்கிய இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமானது.
சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு அனுமதி கொடுப்பதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.90 லட்சம் லஞ்சமாக பெற்றதாக அமலாக்கப்பிரிவு வழங்கிய தகவலின்பேரிலேயே ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் இன்று சிபிஐ ரெய்டு நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் வசிக்கும் தம்பதியர் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமானதே இந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் வனப்பகுதியில் ஷீனா போராவின் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 2012 ஏப்ரல் 24ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளிகளான இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா
கொலை வழக்கில் சிக்கி சிறையில் உள்ள பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதே ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம். இந்த நிறுவனம் நியூஸ் எக்ஸ், 9 எக்ஸ் மற்றும் 9 எக்ஸ் மியூசிக் ஆகிய சேனல்களை நடத்தி வருகிறது. இந்த மீடியா நிறுவனத்திற்கான முதலீட்டை 4 கோடி என்ற அளவில் குறைத்துக் காட்டி வெளிநாடு முதலீடு வளர்ச்சி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
2008 ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டுக்கான அனுமதி பெற்றுத்தந்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சில நாள்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்த ரெய்டு நடவடிக்கையைச் சிபிஐ மேற்கொண்டுள்ளது.

சிபிஐ வழக்கு பதிவு
ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதித்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும்,
அந்நிய முதலீடு பெற ஐஎன்எக்ஸ்ஸுக்கு ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த போது அனுமதி கொடுத்துள்ளார்.
ஐஎன்எக்ஸ்ஸுக்கு கொடுத்த அனுமதியில் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதாயம் அடைந்திருப்பதாகவும், ஆதாயம் பெற்றததாக கார்த்திக் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
இந்த அனுமதியை பெற்றுத்தர அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக ரூ.90 லட்சம் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டதாகவும் ஏற்கனவே அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

14 இடங்களில் சோதனை
சிபிஐ அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் காலையில் இருந்து சோதனை நடத்திவருகின்றது. சென்னை மட்டுமன்றி, காரைக்குடி, டெல்லி, நொய்டாவில் உள்ள அவர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 14 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சிக்கவைத்த ஐஎன்எக்ஸ் மீடியா
பீட்டர் முகர்ஜி எந்த நேரத்தில் ஐஎன்எக்ஸ் மீடியாவை ஆரம்பித்தாரோ அப்போதிருந்தே அவரை சிக்கல் விடாமல் துரத்துகிறது. இப்போது கொலை வழக்கில் சிக்கி மனைவியோடு சிறையில் காலம் தள்ளுகிறார். அவரது நிறுவனத்திற்கு அனுமதி பெற்றுத்தர உதவியதற்கு ஆதாயம் பெற்றதாக ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தியும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications