எடப்பாடி, ஸ்டாலினுக்கு எதிராக அடுத்தடுத்து பேஸ்புக் போஸ்ட்-தெறிக்கவிடும் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா அடுத்தடுத்து முகநூல் பதிவுகளை போட்டுள்ளார்.
Recommended Video
சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மேடைகளில் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய விஷயங்களின் வீடியோவை இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசியல் ஆசையில் இருந்து வரும் கிருஷ்ணப்ரியா முதன்முறையாக அரசியல் தலைவர்களை கேலி செய்து பதிவிட்டுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி விழா பேரூரையாற்றினார். அப்போது காவிரி குறுக்கே கல்லணை கட்டிய கரிகால் சோழன், எண்ணற்ற கோவில்களை புனரமைத்த ரகுராத நாயக்கர், தஞ்சையின் கலை,இசை, நாட்டியத்தை உலகறியச் செய்த இரண்டாம் சரபோஜி மன்னன் என்று தஞ்சாவூரின் புகழை அடுக்கினார்.
தியாகராஜ சுவாமிகள், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற சரித்திரவான்களின் சாதனைகளைப் பெற்றது தஞ்சை பூமி என்றார். மேலும் கம்பராமாயணம் தந்த சேக்கிழாரின் புகழ் பாடும் மண் தஞ்சை மண் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் பேச்சால் சர்ச்சை
கம்பரால் எழுதப்பட்ட கம்பராமாயணத்தை சேக்கிழார் என்று தவறுதலாக குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் முதல்வர் பழனிசாமியின் தவறை சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கிருஷ்ணப்ரியா கேலி
இந்நிலையில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா முதல்வரின் தஞ்சாவூர் மேடைப்பேச்சு வீடியோவை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதோடு நின்று விடாமல் காலக்கொடுமை என்றும் அதற்கு கருத்து பதிவிட்டுள்ளார்.
குடியரசு தினத்தை மறந்த ஸ்டாலின்
இதே போன்று நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின தேதியை மாற்றிக் கூறினார். குடியரசு தின தேதியை ஜனவரி 25, டிசம்பர் 25 என்று மாற்றி மாற்றி பேசிய ஸ்டாலின், கூட்டத்தில் சலசலப்பு ஏற்படவே தனது தவறை உணர்ந்து அருகில் இருந்தவரிடம் கேட்டு ஜனவரி 26 குடியரசு தினம் என்று பேசி முடித்தார்.
அரசியல் தலைவர்கள் பற்றி விமர்சனம்
கிருஷ்ணப்ரியா ஸ்டாலினின் இந்த வீடியோ பதிவையும் போட்டு கண்ணீர் விட்டு கதறும் எமோஜியை அதற்கு ரியாக்ஷனாக போட்டுள்ளார். அரசியல் களத்திற்கு வர கிருஷ்ணப்ரியா தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று அவ்வபோது பொறி கிளம்பிய நிலையில் முதன்முறையாக கிருஷ்ணப்ரியா வருமான வரி சோதனைக்குப் பின்னர் முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலினை வெளிப்படையாக கேலி செய்யும் வகையில் கருத்து பதிவிட்டுளளார் என்பது குறிப்பிடத்தக்கது.