கொலைகள் நடக்கும் போது சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்று முதல்வர் கூறுவது சரியா?: வைகோ
சென்னை: தமிழகத்தில் தினசரி கொலைகள் நடந்து வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என முதல்வர் கூறுவது சரியா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு சில படங்களில் வன்முறை காட்ச்சிகள் இளைஞர்களின் பாதையை மாற்றுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அடுத்தடுத்து வழக்கறிஞர் கொலை செய்யப்படுகின்றனர். கூலிப்படையினர் செய்கின்ற கொலைகள் திமுக ஆட்சியில் வளர்ந்து அதிமுக அதிகரித்து வருகிறது என்றார்
தமிழ்நாட்டில் பணத்திற்காக எதையும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் ஆட்சிபொறுப்பில் இருக்கிற முதல்வர் இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார். சட்டசபையில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக ஜெயலலிதா கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார் வைகோ. தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் படுகொலைகள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதா?
சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக கூறியது அந்த பேச்சின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. அவர்களாகவே ஆம், தமிழகத்தில் சட்டம் ஒமுங்கு கவலை தருகிறது. இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூற வேண்டும். அதுதான் பேச்சில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். அதை விடுத்து இப்படி சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று கூறுவது ஏன்? தினசரி கொலைகள் நடைபெறுவதுதான் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதா? என்ற கேள்விதான் எழுகிறது என்றார் வைகோ.

பணத்திற்காக கொலை
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பணத்திற்காக எதையும் செய்யலாம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டனர். ஜனநாயகத்தின் உயிர் ஓட்டு. பணத்திற்காக ஓட்டை விலைக்கு வாங்கினார்கள். இப்போது பணத்திற்காக கூலிப்படையினர் கொலையை செய்கிறார்கள். தமிழகத்தினை மீட்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், காவல்துறையினருக்கும் மட்டுமல்லாது அனைவருக்கும் உள்ளது என்றார்.

இளம் வயதில் வன்முறை
கடந்த காலங்களில் பள்ளிகளில் நீதி போதனை என்ற வகுப்பு இருக்கும். இப்போது மாறல் சயின்ஸ் என்பதே இல்லை. இன்றைக்கு சிறு வயதில் மனிதநேய உணர்வுகளை வளர்ப்பதற்கு மாறாக வன்முறையை தூண்டும் வகையில் சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன என்று வைகோ குற்றம் சாட்டினார்.

எம்.ஜி.ஆர் சினிமா
அனைத்து சினிமாக்களையும் நான் கூறவில்லை. தோழா படம் நல்ல படம். எம்.ஜி.ஆர் படங்களில் சமூக அக்கறை அதிகம் இருக்கும். படுகொலை சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வைகோ.

மேயர் தேர்தல்
மேயர் தேர்தலில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் குறித்து பேசிய வைகோ, திமுக எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியம் அளிப்பதாக கூறினார். அவர்கள்தான் இதை முதலில் வழிகாட்டினார்கள். அந்த வழியில் அதிமுக செல்கிறது. மக்களுக்கு ஞாபகமறதி கிடையாது. திமுகவினர்தான் குதிரை பேரத்திற்கு வழி வகுத்தவர்கள் என்று வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications