ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வீட்டில் பணம் பதுக்கல்? ஐடி அதிரடி ரெய்டு
ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் ஆதரவாளர் ராமச்சந்திரன் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தருவதற்காக பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் ராமச்சந்திரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஆர்.கே.நகரில் எப்படியும் வெல்ல வேண்டும் என்பதற்காக பணத்தை வாரி இறைத்து வருகிறார் தினகரன். ஒரு ஓட்டுக்கு ரூ10,000 வரை லஞ்சமாக கொடுக்கிறார் தினகரன்.

தங்க நகைகள்
அதேநேரத்தில் ஒருவரால் 50 வாக்குகளை கொண்டுவர முடியும் என்றால் தங்க நகைகளை அள்ளிக் கொடுத்து தக்க வைக்கிறாராம் தினகரன். எப்படியும் வென்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீர வேண்டும் என்பதுதான் தினகரனின் பேராசையாம்.

பணம் இருக்கிறதே..
என்னதான் சொந்த கட்சியினரே உள்ளடி வேலைபார்த்தாலும் பணம் பாதாளம் வரை பாயும் என்பதில் முழு நம்பிக்கையோடு இருக்கிறாராம் தினகரன். அண்மையில் பணப் பட்டுவாடா செய்த தினகரன் ஆதரவாளர் கருணாமூர்த்தியை போலீஸ் கைது செய்தது.

பணம் பதுக்கல்?
இந்த நிலையில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளரான ராமச்சந்திரன் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து ராமச்சந்திரன் வீட்டுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கிடைக்கவில்லை...
ஆனால் இந்த சோதனையின் போது பணம் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் வருவதற்கு முன்னரே பணத்தை வேறு இடத்தில் பதுக்கி வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications