தேவர் சிலைக்கு தங்கக் கவசம்... அணிவித்தார் ஜெயலலிதா
பசும்பொன்: பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று தங்கக் கவசத்தை அணிவித்தார்.
அவரது வருகையைத் தொடர்ந்து 5000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் வந்தார் முதல்வர் ஜெயலிதா. பின்னர் தேவர் நினைவிடம் சென்று அங்கு தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்தார். அதிமுக சார்பில் இந்த தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு ஜெயலலிதா பசும்பொன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார். அதன்படி தற்போது தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வந்த ஜெயலலிதாவை, விமான நிலையத்தில் மேயர், கலெக்டர் உள்பட பலர் வரவேற்றனர். மேலும் அதிமுக தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் கிராமத்துக்கு வந்த முதல்வரை அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் தேவர் நினைவிடத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த தங்கக் கவசத்திற்கு அவர் புனித நீர் ஊற்றினார். அதில் ரோஜா மலர்களையும் தூவினார். இதைத் தொடர்ந்து தங்க கவசங்களை கோவை காமாட்சிபுரி ஆதீனத்திடம் ஜெயலலிதா வழங்க, அதனை முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அவர் அணிவித்தார். அதன் பின்னர் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு முத்துராமலிங்கத்தேவருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் ஹெலிகாப்டரில் மதுரை புறப்பட்டார் ஜெயலலிதா.
முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்புக்காக தென் மண்டல ஐஜி அபய் குமார் சிங் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 3 சரக டிஐஜிக்கள், 7 எஸ்.பிக்கள் உள்பட 5000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
7 அமைச்சர்கள் முன்கூட்டியே வந்து ஆய்வு
முன்னதாக முதல்வர் வருகையைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான 7 அமைச்சர்கள் குழு நேரில் வந்து ஆய்வு செய்தது.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத வாக்கில் நடைபெறவுள்ளது. அதற்கான தேதிகள் அடுத்த மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.