ஜூன் 21... ஆர்.கே.நகரில் ஜெ. 'சூறாவளி' பிரசாரம்... ஒரேநாளில் 5 இடங்களில் வாக்கு சேகரிப்பு
சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா வரும் 21ம்தேதி தேதி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொகுதியில் ஒரேநாளில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயலலிதா வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 32 பேர் களத்தில் உள்ளனர்.

தற்போது இத்தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட்வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியினரும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் முதல்வர் ஜெயலலிதா வரும் 21-ந் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 21-ந் தேதி ஞாயிறன்று மாலை 3 மணிக்கு மேல் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து பிரசார வேனில் புறப்படும் அவர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 இடங்களில் வாக்குசேகரிக்க உள்ளார்.

ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். ஜெயலலிதா வருகையையொட்டி, ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications