காடுவெட்டி குரு போலீஸ் பாதுகாப்பு கோரி மனு: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.
இதையடுத்து எனது சொந்த தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி சென்று கொண்டிருந்தபோது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள குமரக்குடி என்ற இடத்தில் எனது வாகனத்தை ஒரு கும்பல் கொடூர ஆயுதங்களால் தாக்கியது. இது குறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நான் எம்.எல்.ஏ.வாகவும், வன்னியர் சங்க தலைவராகவும் உள்ளேன். இதனால் எனக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பியிடம் கடந்த 14-ந் தேதி மனு கொடுத்தேன். இதுநாள் வரை எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.
என்னுடைய உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்குவது தமிழக போலீசாரின் கடமை ஆகும். எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications