வீரதீர செயலுக்காக கல்பனா சாவ்லா விருது பெற்ற கோவை முத்துமாரி.. அப்படி என்ன செய்தார்?
கோவை முத்துமாரிக்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
Recommended Video

சென்னை: கோவை முத்துமாரிக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
நாட்டின் 72வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு நல் ஆளுமைக்கான விருதுகளை அறிவித்தது.
அதன்படி துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது கோவை மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரிக்கு வழங்கப்பட்டது.

முத்துமாரி
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பெரிய கல்லார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி. வனத்தை ஒட்டிய பெரிய கல்லார் கிராமத்தில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் ஆதிக்கம் அதிகம்.

மகளை இழுத்துசென்ற சிறுத்தை
இந்நிலையில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்த முத்துமாரியின் மகளை அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை இழுத்துச் சென்றது.

கட்டையால் விரட்டிய தாய்
மகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த தாய் முத்துமாரி, தனது மகளை சிறுத்தை இழுத்துச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அருகில் இருந்த கட்டையை எடுத்து சிறுத்தையை சரமாரியாக தாக்கி விரட்டினார் முத்துமாரி.

காப்பாற்றப்பட்ட மகள்
இதில் சிறுமியை விட்டுவிட்டு தப்பியோடியது சிறுத்தை. தனி ஆளாக சிறுத்தையை கட்டையால் அடித்து விரட்டி மகளை காப்பாற்றினார் முத்துமாரி. அவரது துணிச்சலை பலரும் பாராட்டினர்.

கல்பனா சாவ்லா விருது
முத்துமாரியின் இந்த துணிச்சலை பாராட்டும் வகையில் அவருக்கு தமிழக அரசு துணிச்சல் மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை வழங்கி கவுரவித்துள்ளது.












Click it and Unblock the Notifications