தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி? கமல்ஹாசன் அளித்த 'செம' பதில்!
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பதில் அளித்தார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை 5 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
நிருபர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் என்ன என்பதை பாருங்கள்.
கூட்டணி யாருடன்?
லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது? காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார் என டிடிவி தினகரன் கூறியுள்ளாரே? என்ற நிருபர்களின் கேள்விக்கு, "ஒரு சிக்கலான பிரச்சினை எங்கள் கட்சிக்கு என்னவென்றால், 'ஊழலற்ற' என்ற வார்த்தையை தைரியமாக எங்களால் கூற முடியும். எனவே கூட்டணிக்கு நிறைய பேர் கிடைக்க மாட்டார்கள்" என்றார்.
உள்நோக்கம் உள்ளது
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே என்ற நிருபர்களின் கேள்விக்கு "வெளிப்படைத்தன்மை அவர்களுக்குக் கிடையாது என்பதற்கு அவர்கள் லோக்ஆயுக்தா சட்டத்தை நீர்த்துப்போக வைத்த ஒரு செயலை உதாரணம். இது உள்நோக்கம் கொண்டதுதான்" என்றார் கமல்ஹாசன்.
புன்சிரிப்பு
பிக்பாஸ் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, அதை உங்களை போலவே, நானும் ஒரு புன் சிரிப்போடு பார்க்கிறேன். இது முதல் கேஸ் இல்லைங்க. இப்படியெல்லாம் நடக்க கூடும் என்ற யூகத்தில் இவர்கள் போட்டுள்ள வழக்கு எனக்கு வியப்பாக உள்ளது என்றார்.
பேசமாட்டேன்
விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு தொடர்பான கேள்விக்கு, இதுபற்றி பேசக்கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு. அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் நான் கோர்ட்டை மதித்து பேச மாட்டேன். விஸ்வரூபம் 2 திட்டமிட்டபடி வெளியாகும். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.