தாக்குதல் பீதி... சென்னையில் கன்னடப் பள்ளிகள் இழுத்து மூடல்!!
சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் வன்முறைகள் வெடிக்கும் என்பதால் அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது போன்றே தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயங்கும் கன்னடப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கர்நாடகாவில் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கனவே 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கே, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தேறின.

இதனால் தமிழகத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் கர்நாடக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னையிலும் கன்னடருக்கு சொந்தமான உட்லண்ஸ் ஓட்டல் தாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள கன்னட சங்கம் சார்பில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. சென்னையில் கன்னடருக்கு எதிராக வன்முறை ஏதாவது நடக்குமோ என்ற பயத்தில் இந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அயன்புரம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த கன்னட பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications