ஏவுகணை நாயகர் அப்துல் கலாமுக்கு காரைக்குடி பள்ளி மாணவ, மாணவியர் அஞ்சலி
காரைக்குடி: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்றனர்.
முன்னாள் குடியரசு தலைவரும், இந்திய ஏவுகணைத் திட்ட தந்தையுமான டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று 28.07.2015 காலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அப்துல் கலாம் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினார். அச்சமயம் அப்துல கலாம் அவர்களின் சாதனைகள், மாணவர்கள் மீது அவர் கொண்ட ஈடுபாடு, அவர் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவித்துள்ள தகவல் பற்றி பட்டதாரி ஆசிரியர் கோமதி மாணவர்களுக்கு கூறினார்.
பின்னர் ஆறாம் வகுப்பு மாணவன் அழகப்பன் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பற்றி இரங்கல் கவிதை வாசித்தான். மாணவர்கள் அனைவரும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறிய 10 உறுதிமொழிகளைக் கூறி அவற்றை வாழ்க்கையில் பின்பற்றுவதாக உறுதி ஏற்றனர்.