நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக சொந்தக் கிராமத்தில் கொந்தளிப்பு.. வீடுகளில் கறுப்புக் கொடி
கடலூர்: நீதிபதி கர்ணனை கைது செய்ய கூடாது என்று வலியுறுத்தி கடலூர் மாவட்டம் கர்நத்தம் கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கர்நத்தம் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி கைது உத்தரவுக்கு எதிராக மக்கள் களம் இறங்கியுள்ளனர்.
நீதிபதி கர்ணன் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் கர்நத்தம். அந்த கிராம மக்கள், கர்ணனின் கைது உத்தரவுக்கு எதிராகவும் மண்ணின் மைந்தன் கர்ணனுக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

நீதிபதி கர்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் போது சக நீதிபதிகளுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கும் அவருக்கு நெருக்கடிகள் வர, அவர் மற்ற நீதிபதிகளுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டியதாயிற்று என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தில்.
இந்த நிலையில் அவர் மீது உச்சநீதிமன்றம் கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதனைக் கண்டிக்கும் வகையில் கர்நத்தம் பகுதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. நீதிபதி கர்ணனின் தம்பியான வழக்கறிஞர் அறிவுடைய நம்பி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு,அந்தப் பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலை அருகே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி,கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications