கருணாநிதி 94: கோபாலபுரம் வந்த ராஜாத்தியம்மாள் - களை கட்டிய பிறந்தநாள் விழா
கருணாநிதியின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு கோபாலபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ராஜாத்தியம்மாலும், கனிமொழியும் காலை முதலே கோபாலபுரம் வந்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் விழாக் கோலம் பூண்டுள்ளது.
வீட்டு வாசலின் முகப்பு பகுதி வாழை தார்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இல்லம் முழுவதும் மலர்களால் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லாத்தின் முன்பாக குவிந்துள்ளனர்.
தொண்டர்களின் வாழ்த்து கோஷம் கோபாலபுரம் பகுதியில் எதிரொலித்துக் கொண்டுள்ளனது.
பிறந்தநாள் ஆசி
மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், கருணாநிதியை சந்தித்து பிறந்தநாளுக்கு ஆசி பெற்றனர். தயாநிதிமாறன் வந்து கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.
ராஜாத்தியம்மாள் வருகை
ஆண்டுதோறும் தனது பிறந்தநாளன்று சிஐடி காலனியில் ராஜாத்தி அம்மாள், கனிமொழியுடன் மரக்கன்று நட்டு கொண்டாடுவார் கருணாநிதி இந்த ஆண்டு உடல்நலக்குறைவினால் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதால் பிறந்தநாளன்று காலையிலேயே தனது மகளுடன் கோபாலபுரம் வந்து கருணாநிதியை சந்தித்தார்.
கனிமொழி ஆசி
கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி கனிமொழி, கருணாநிதி விரைவில் தொண்டர்களை சந்திக்க இருப்பதாக கூறினார்.
கோபாலபுரத்தில் உற்சாகம்
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், நீண்ட நாள்களுக்குப் பிறகு கோபாலபுரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இனிப்புகளைக் கொடுத்தும் வாழ்க கோஷமிட்டும் தங்கள் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் திமுக தொண்டர்கள்.