அழகிரியின் சந்திப்புக்குப் பின் உற்சாகத்தில் தென்மாவட்ட திமுக!
நிச்சயம் இந்த செய்தி திமுக பொருளாளர் முக ஸ்டாலின் மற்றும் அவரது அணிக்கு அத்தனை உவப்பானதாக இருக்காதுதான். ஆனால் உண்மை நிலவரம்... ஏக விரக்தியிலிருந்த திமுகவினர் லேசாக நிமிர ஆரம்பித்துள்ளனர் கருணாநிதி - முக அழகிரி சந்திப்புக்குப் பிறகு.
குறிப்பாக தென் மாவட்ட திமுகவினர் ஒருவித நம்பிக்கையுடன் தேர்தல் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

திமுகவின் ஏக வாரிசாக முக ஸ்டாலின் தமிழகமெங்கும் சுற்றி வந்தாலும், தேமுதிக வருமென்று இலவு காத்த கிளியாய் காத்திருந்து, பெரும் ஏமாற்றத்துக்குள்ளானதில் திமுகவின் களப்பணியாளர்கள் விரக்தி நிலைக்கே போய்விட்டனர்.
'முக அழகிரி துணை இல்லாமல் தென் மாவட்டத் தொகுதிகளை கணிசமாக வெல்ல முடியாது' என்பதுதான் நிஜ நிலைமை. முக ஸ்டாலின் அணியினருக்கு ஜீரணிக்க முடியாத நிஜம் இது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதும் இதனால்தான்.
தேமுதிகவும் இல்லாமல், வேறு பலமான கூட்டணிக் கட்சிகளும் இல்லாத சூழலில், கைவசமிருக்கும் பலமான நபரான அழகிரியை களத்தில் இறக்கினால் நிச்சயம் பலனிருக்கும் என கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், கருணாநிதியின் மகள் செல்வி உள்ளிட்டோர் வற்புறுத்தியதால்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அதிலும் தேமுதிக - மநகூ இணைந்த அறிவிப்பு வந்த உடனே அழகிரியை வரச் சொன்னதே கருணாநிதிதான் என்கிறார்கள்.
இந்த சந்திப்பு தனிப்பட்ட முறையிலானது என்று ஸ்டாலின் வேண்டாவெறுப்பாகக் கூறுகிறார். குறிப்பாக அரசியலுடன் தொடர்புபடுத்தி எழுத வேண்டாம் என்றே கூறுகிறார். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? இதை மீடியா எழுதிதான் தெரிந்து கொள்ள வேண்டுமா?
தென் மாவட்ட திமுகவினர் இப்போது கூட்டணி கசப்புகளை மறந்துவிட்டு உற்சாக வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம். காரணம், கருணாநிதியுடன் சந்திப்பு முடிந்து கிளம்பியதும் அழகிரியிடமிருந்து வந்த சாதக பதில்கள்தான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications