எவ்வளவு பெரிய மோசடி? ஒரு அரசாங்கமே இப்படிப்பட்ட மோசடியைச் செய்யலாமா? கருணாநிதி ஆதங்கம்
சென்னை: அக்டோபர் 2ம் தேதி சிறுதாவூரில் ஜெயலலிதா ஓய்வெடுக்க சென்ற நிலையில், 3ம் தேதி சென்னையில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதை போன்ற செய்திக்குறிப்பை அரசு வெளியிட்டுள்ளது மிகப்பெரும் மோசடி என திமுக தலைவர் கருணாநிதி கண்டித்துள்ளார்.
அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா சிறுதாவூரில் ஓய்வெடுப்ப தாகச் செய்தி வந்துள்ளது. ஆனால் 3ஆம் தேதியன்று சிங்காரவேலர் - ஜீவரத்தினம் மணி மண்டபங்களையும், வேறு சில கட்டிடங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா; அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்ததாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது அரசாங்கத்தின் சார்பில் 3ஆம் தேதி தரப்பட்ட செய்திக் குறிப்பு. ஆளுங்கட்சி நாளேட்டிலேயே 4ஆம் தேதி காலையில் தான் வந்துள்ளது.
அந்த ஏட்டில் "முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 29-9-2015 அன்று தலைமைச் செயலகத்தில்" இந்தக் கட்டிடங்களையெல்லாம் திறந்து வைத்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தச் செய்தி 30ஆம் தேதி ஏடுகளிலே வெளிவரவே இல்லை.
செய்தித் துறை சார்பில் செய்திக் குறிப்பும் தரப்படவில்லை. ஆனால் 3ஆம் தேதி தான், அதாவது முதல் அமைச்சர் தலைமைச் செயலகத்திற்கே வராத நாளில், அவர் ஏதோ வந்ததைப் போலவும், இந்த மணி மண்டபங்களைத் திறந்து வைத்ததைப் போலவும் மக்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காக, தமிழக அரசின் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய மோசடி?
ஒரு அரசாங்கமே இப்படிப்பட்ட மோசடியைச் செய்யலாமா? தனிப்பட்ட நபர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் தவறு செய்வதே கூடாது எனும்போது, அரசின் பெயரிலேயே இப்படிப்பட்ட தவறுகள் - பொதுமக்களைத் திசை திருப்பித் தவறாக வழி நடத்தும் நிகழ்வுகள் நடக்கலாமா?
4ஆம் தேதியன்று காலையில் வெளிவந்த அனைத்து நாளேடுகளிலும் இந்தச் செய்தி வந்துள்ளது. இந்த மோசடிக்கு மூலக் காரணம் யார்? உண்மையில் முதல் அமைச்சர் அந்தக் கட்டிடங்களைத் திறந்து வைத்தது எப்போது? எந்த நாளில்? முதலமைச்சர் திறந்து வைத்த நாளிலேயே அந்தச் செய்தியை வெளியிடாமல் இருந்தது ஏன்?
அதற்காகத்தான் முதலமைச்சரின் காணொலிக் காட்சி நிகழ்ச்சிகளுக்கு அரசின் புகைப்படக்காரரைத் தவிர மற்ற ஊடகங்களை அனுமதிப்பதில்லையா? அதுபற்றி எந்த ஊடகங்களும் தங்களை அனுமதிக்காதது பற்றி கேள்வி எழுப் பாதது ஏன்? செய்தித் துறையின் செயலாளரும், இயக்குனரும்தான் இதற்குக் காரணமா? இதற்கு அரசின் நேரடியான பதில் என்ன?












Click it and Unblock the Notifications