புறப்பகை நோக்கி, உட்பகை நீக்கி... ஒன்றுபட்டு உழைத்திடுவோம்: கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து
சென்னை: "புறப்பகை நோக்கி, உட்பகை நீக்கி" ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட ஆங்கில புத்தாண்டு வாழ்த்து அறிக்கை:
2014-ஆம் ஆண்டிற்கு வரவேற்புக் கூறி; எனது அருமைத் தமிழக மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். மூன்று மாதங்களில் மின்சாரப் பிரச்சினையைத் தீர்ப்போம் என கூறி வந்த ஆட்சியின் மூன்றாம் ஆண்டிலும் மக்கள் இருளில் தவிக்கும் நிலை தொடர்கிறது. அனைத்துவகைத் தொழில் களும் முடங்கிவிட்டன; புதிய தொழில்களும் இல்லை. தொழிலாளர் சமுதாயம் அல்லல்படுகின்றது;

வேளாண்மை நாளுக்கு நாள் குன்றி வருகிறது. நெல்லுக்கும், கரும்புக்கும் நியாய விலை இல்லை; விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். மணல் கிடைப்பதில்லை; கட்டுமானப் பணிகள் முடங்கி, கட்டுமானத் தொழிலாளர் வாழ்வு கேள்விக் குறியாகிறது. ஆட்சிக்கு வந்தபின் செயின் பறிப்பவர் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்றார்கள்.
செயின் பறிப்பு மட்டுமல்ல; கொலை, கொள்ளை, கற்பழிப்பு எனும் கொடிய குற்றங்கள் எல்லாம் தினமும் பெருகிக் கொண்டுள்ளன. விலைவாசி உயர்வு எல்லாவகை மக்களுக்கும் வேதனையையே பரிசாகத் தந்துள்ளது.
வேதனையைத் தீர்க்க வேண்டியவர்கள் மத்திய அரசு மீதும், கழகத்தின் மீதும் பழி சுமத்தியே தப்பிக்கப் பார்க்கின்றனர். இவையும் இவை போன்ற பலவும்தான் 2013இல் நாம் கண்டவை. இவையெல்லாம் களையப்படவேண்டும்.
கடந்த காலத்தில் செய்யத் தவறியவைகளை நினைவுகூர்வோம். தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழகத்திற்கும் பயன் தந்திடும் பணிகளோடு இந்தியத் திருநாடு முழுமைக்கும் வலிவையும் பொலிவையும் தந்திடத்தக்க கடமைகள் ஆற்றிட -களம் கண்டிட -"புறப்பகை நோக்கி, உட்பகை நீக்கி" ஒன்றுபட்டு உழைத்திடுவோம். புத்தாண்டு புத்துணர்வு வழங்கட்டும்.
இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications