நில ஆர்ஜித மசோதா: மத்திய, மாநில அரசைக் கண்டித்து நாளை தி.மு.க. ஆர்ப்பாட்டம்- சென்னையில் கருணாநிதி!
சென்னை: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நாளை நடைபெற உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கண்டித்தும், தமிழக வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் வள்ளுவர் கோட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் என 2 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார்.
திருவாரூரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
இது போல் மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கட்சியின் முன்னணி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அணி பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னையில் 2 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆர்ப்பாட்டத்தை முன் எடுத்து செல்ல தி.மு.க. திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications