சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - கருணாநிதி
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்

செய்தியாளர்: ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழ் மாநில அரசே அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம் என்று மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி: இது ஒரு சட்டப் பிரச்சினை. அதைப் பற்றி ஆராய்ந்து தான் சொல்ல வேண்டும். அவசரப்பட்டு எதையும் சொல்லக் கூடாது.
செய்தியாளர் :- தமிழக அரசுக்கே அவசரச் சட்டம் கொண்டு வர அதிகாரம் இருப்பதாக மத்திய அரசின் அமைச்சர் ஒருவரே இன்று கூறியிருக்கிறாரே?
கருணாநிதி: இதைப்பற்றி ஏற்கனவே நான் என்னுடைய அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேனே?
செய்தியாளர் :- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பேசும்போது, வரக் கூடிய பொதுத் தேர்தலில் அவர்களுடைய கட்சி அமோக வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி:- அது அவர்களுடைய எதிர்பார்ப்பு!
செய்தியாளர் :- வரக் கூடிய தேர்தலில் தி.மு.கழகத்தின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
கருணாநிதி:- பிரகாசமாக இருக்கிறது.
செய்தியாளர் :- தி.மு. கழகத்தின் தேர்தல் அறிக்கை எப்போதும் பேசப்படுகின்ற அளவுக்கு இருக்கும். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி எந்த நிலையில் இருக்கிறது.
கருணாநிதி:- தேர்தல் அறிக்கை எழுதப்பட்டு வருகிறது. மிக விரைவில் அது வெளி வரும்.
செய்தியாளர் :- ஜல்லிக் கட்டுப் பிரச்சனையில் பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போடுவதாகச் சொல்லப்படுகிறதே?
கருணாநிதி:- நான் அப்படி நினைக்கவில்லை.
இவ்வாறு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications