கருணாநிதியின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் - டிகேஎஸ் இளங்கோவன் தகவல்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக ராஜ்யசபா உறுப்பினரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை பிரச்சினை காரணமாக உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் ஒன்றை எடுத்துக்கொள்ள தவறியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் டாக்டர்கள் கருணாநிதியை சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இதனால் சில நாட்களுக்கு பார்வையாளர்கள் அவரை காண வருவதை நிறுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பூரணமாக குணமடைந்து 10 நாட்களில் கழக பணியாற்றுவார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.