ஐபிஎல் தாக்குதல் வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது.. சிறையிலிருந்து வெளியே வருகிறார் கருணாஸ்
சென்னை: ஐபில் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் ரசிகர்களை தாக்கிய வழக்கிலும் எம்எல்ஏ கருணாசுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் எம்எல்ஏ கடந்த 23ம் தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீது இன்று காலை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சென்னையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். கிரிக்கெட் ரசிகர்களை தாக்கியதாக கொலைமுயற்சி வழக்கும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக திருவல்லிக்கேணி போலீசார் நேற்று முன்தினம் திடீரென அறிவித்தனர். இதுதொடர்பாக எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் போலீசார் மனு அளித்தனர்.
ஆனால் கருணாஸ் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, இந்த குற்றச்சாட்டில் கருணாசை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப அவரது வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு கருணாஸ் மீதான கொலைமுயற்சி வழக்கை ரத்துசெய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கை மட்டும் ஏற்றுக்கொண்டது நீதிமன்றம். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று மாலை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், கருணாசுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications