கிளினிக் திறந்த 2 நாட்களில் பலியான பெண் டாக்டர் – திருமணத்திலிருந்து திரும்பும் போது பரிதாபம்
சென்னை: விழுப்புரத்தில் நடுரோட்டில் கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் பலியானார். திருமண வீட்டுக்கு சென்றுவிட்டு காரில் தோழிகளுடன் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பவரின் மகள் பிரணவப்பிரியா. இவர் மதுராந்தகம் அருகே உள்ள சின்னகேளம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் ஒரு காரில் பிரணவப்பிரியா தனது தோழிகள் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த டாக்டர் பிரீத்தி, நீலாங்கரையை சேர்ந்த டாக்டர் திருமேனி ஆகியோருடன் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
நேற்று காலை திருமண விழா முடிந்ததும் இவர்கள் 3 பேரும் புதுச்சேரியில் இருந்து அச்சிறுப்பாக்கத்திற்கு காரில் புறப்பட்டனர். காரை பிரணவப்பிரியா ஓட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொளசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பிரணவப்பிரியாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் கார் உருண்டபடி சாலையின் மறுபக்கத்திற்கு சென்று கவிழ்ந்தது.
இதில் டாக்டர் பிரணவப்பிரியா காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது தோழிகள் பிரீத்தி, திருமேனி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரணவப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரணவப்பிரியாவின் தந்தை சிவப்பிரகாசம் அச்சிறுப்பாக்கத்தில் மருந்து கடை, நகைக் கடை, ஜவுளி கடை, மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். பிரணவப்பிரியா நேற்று முன்தினம் தான் அச்சிறுப்பாக்கத்தில் சொந்தமாக கிளினிக் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications