சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை
சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்து வந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் லட்சுமி சுதா (58). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் லட்சுமி சுதா கொலை செய்யப்பட்டுள்ளார். நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து லட்சுமி சுதா உடலை கைப்பற்றிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள வித்யோதயா மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்த சாந்தி (65) என்ற மூதாட்டி கடந்த திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார். சொத்துக்காக சாந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் துப்பு துலங்காத நிலையில், லட்சுமி சுதா என்ற பெண் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களைக் குறி வைத்துக் கொலை செய்வது ஒரு தொடர் கதையாக தொடர்ந்து வருகிறது. தி.நகரில் மட்டும் பல பெண்கள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாந்தி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட சில தினங்களில் மற்றொரு கொலை மேற்கு மாம்பலம் பகுதியில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.