மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பான புத்தகங்கள் பார்க்க மட்டுமல்ல... வாசிக்கவும், நேசிக்கவும் தான்!
சென்னை : சென்னையில் 38வது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
செல்போன், இணையம் என இடையில் பாதை மாறிப்போன பலர் மீண்டும் புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.
இந்நேரத்தில் புத்தக வாசிப்பு பிரபல தலைவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என பார்ப்போமா...

தனிமைத் தீவு... புத்தகங்களே துணை
தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்கப்பட்ட போது "புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்" என்று பதிலளித்தார் ஜவகர்லால் நேரு.

புத்தகப் புழு...
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் "இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று " என்றார் பெட்ரண்ட் ரஸல்.

மனிதனின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு...
மனிதனின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்ட போது சற்றும் யோசிக்காமல் "புத்தகம்" என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

கரண்டியை பிடுங்குங்கள்...
"கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்" என்றாராம் தந்தை பெரியார்.

வேறு சுதந்திரம் வேண்டாம்...
"வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்"என்றாராம் நெல்சன் மண்டேலா.

பிறந்தநாள் பரிசாக...
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்ட பொழுது" புத்தகங்கள்" என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட, அப்போது குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம் தான் உலகிலேயே மிகப்பெரியது.

நூலகம்...
குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெரியப்பட்ட போது, பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் "நூலகம்".

சார்லி சாப்ளின் பழக்கம்...
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.

குழந்தைக்கான சரியான பரிசு...
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச்சிறந்த பரிசு புத்தகம்தான்"என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

நூலகம் கட்டுவேன்...
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது" ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் காந்தி.

10 புத்தகங்கள் படிக்க...
விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கட்டது ஏன் என்று வினவியபோது "பத்து புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது"என பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.

பயங்கரமான ஆயுதங்கள்...
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்ட போது "புத்தகங்கள்தான்" என்றாராம் மார்டின் லூதர் கிங்.

நூலகத்திற்கு அருகில்...
எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது?" என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.

பகத்சிங்...
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத் சிங்.












Click it and Unblock the Notifications