கை, கால் இழந்த பிச்சைக்காரர், தொழுநோயாளிகள் அளித்த வெள்ள நிதி.. திருவண்ணாமலையின் ஈர மனங்கள்!
பிச்சைக்காரரும், தொழுநோயாளிகளும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.
Recommended Video

திருவண்ணாமலை: கேரளாவின் இன்றைய நிலையை தனக்கும், தன் மாநிலத்துக்கும் நேர்ந்த ஒன்றாகவே உலக மக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர்.
ஏற்படும் பரிதாப உணர்வும், ஆதரவளிக்கும் மனநிலையும், அடைக்கலம் தரும் விசால மனமும் பெருகி வருகிறது. அதன்விளைவாக, அள்ளி கொடுக்கும் கரங்களும் அதிகரித்தே வருகிறது.
வீடு இல்லை, பொருட்கள் இல்லை, உடைமைகள் இல்லை, மாற்றிக் கொள்ள துணி இல்லை. நிவாரண பொருட்களே இன்றைய நிலையில் அனைத்துமாக இருக்கிறது கேரள மக்களுக்கு.

ஒன்றுகூடும் கரங்கள்
பொதுவாக ஒரு மாநிலத்தில் வெள்ளம், புயல் என்றால் அதற்கான நிதி, மற்றும் நிவாரண உதவிகளை பெரும்பாலும் வேறு மாநில அரசுகள்தான் செய்யும். வழக்கம்போல் மத்திய அரசு எந்த மாநிலம் என்றாலும் உதவிகளை செய்துதான் ஆக வேண்டும். ஆனால் பேரழிவு என்று வரும்போதுதான் எல்லோரும் ஒன்றுகூடுகிறார்கள். இது சுனாமி, சென்னை புயல் உள்ளிட்டவற்றில் நேரிடையாக கண்டோம். அதுதான் இப்போது கேரளாவுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

தொழுநோயாளிகள்
மத்திய, மாநில அரசுகள், பிரபலங்கள், நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், என்றுபோய் தனி நபரும் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் உதவிய தனிநபர்களும் உண்டு. அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் தொழுநோயாளிகள். மற்றொருவர் பிச்சைக்காரர். மல்லவாடியில் தொழுநோய் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 2 சிறுவர்கள் இல்லாமல், வயதானவர்கள் மட்டும் 36 பேர் உள்ளனர்.

பிச்சைக்காரர் ஏழுமலை
இவர்கள்தான் கேரள மக்களுக்கு நிவாரண உதவியை தந்துள்ளனர். தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்த 1035 ரூபாயை, கேரள நிவாரண உதவியாக தந்துள்ளனர். அதேபோல், ஏழுமலை என்பவருக்கு 2 கைகள், ஒரு கால் கிடையாது. பிச்சை எடுத்துதான் பிழைப்பு ஓட்டிக் கொண்டிருக்கிறார். தான் ஒருநாளில் பிச்சையெடுத்த வசூல் தொகை 100 ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.

வள்ளுவன் வாக்கு
தொழுநோயாளிகள் கொடுத்த 1035 ரூபாயும் பிச்சைக்காரர் ஏழுமலை கொடுத்த 100 ரூபாயும் சேர்த்து 1135 ரூபாயாக கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. "காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" வள்ளுவரின் இந்த வாக்கியம் 2 ஆயிரம் வருடங்கள் கடந்தும் இன்றும் பலிக்கிறது... நடக்கிறது.. காலம் கடந்தும் இனிக்கிறது!












Click it and Unblock the Notifications