சிவகங்கையில் கனமழை: மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி
காரைக்குடி: சிவகங்கை அருகே கனமழை கொட்டியதில் மின்னல் தாக்கி ஸ்கூட்டியில் சென்ற கர்ப்பிணிப் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதும் கோடை மழை கொட்டிவருகிறது. சிவகங்கை, காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று பிற்பகல் முதல் மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.

கோடை மழை என்பதால் இடியும், மின்னலுமாய் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏராளமானோர் மழைக்கு அஞ்சி ஒதுங்கி நின்றனர். எனினும் சிவகங்கையை அடுத்த கீழக்குவானிபட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி மற்றும் ராஜகுமாரி என்ற இரு பெண்கள் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மின்னல் தாக்கியது. இருவரும் உடல் கருகி இறந்தனர்.
இருவரும் அக்கா தங்கைகள் ஆவர். இதில் மகேஸ்வரிக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி அவர் தற்போது கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கை ராஜகுமாரி ஸ்கூட்டியில் சென்றபோது அவருக்கு பின்னால் மகேஸ்வரி உட்கார்ந்து சென்றுள்ளார். மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications