ஜெயலலிதாவுக்கு 6 மணிநேரம் சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் சிகிச்சை அளித்தார். மேலும் பிசியோதெரபி நிபுணர்களும் சிகிச்சை அளித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்து நேற்றுடன் 41 நாட்கள் ஆகிவிட்டன. டாக்டர் ரிச்சர்ட் நேற்று காலை 10.05 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அவர் பிற்பகல் 2.15 மணிக்கு வெளியே சென்றுவிட்டு மீண்டும் மாலை 4.20 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார்.
பின்னர் அவர் மாலை 6.15 மணிக்கு தான் கிளம்பிச் சென்றார். மேலும் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள பிசியோதெரபி நிபுணர்களான சீமா மற்றும் ஜூடியும் நேற்று காலை முதலே ஜெயலலிதாவை உடற்பயிற்சி செய்ய வைத்தனர்.
ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவாராம்.