சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்- சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் ஆறு மாநிலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் ஏற்கனவே அறிவித்ததுபடி, இன்று வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஆறு மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
மண்டல அளவில் வாடகை ஒப்பந்தம் நடந்த வலியுறுத்தி தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தென்மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், புதிய வாடகைகான டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி அறிவித்தன. அதில் இதுவரை மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த மண்டல வாரியான டெண்டர் நடைமுறை மாறி, தற்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
இந்த புதிய டெண்டர் நடைமுறை மூலம் ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதோ, அந்த மாநிலத்தில் நடைபெறும் டெண்டரில் தான் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அளவிலான வாடகை டெண்டர் நடைமுறையை திரும்பப்பெற வலியுறுத்தியும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இறங்கி உள்ளனர்.