மறைந்த பி.எஸ். அப்துர் ரஹ்மான் உடல் அடக்கம்- மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை: மறைந்த கல்வியாளர், தொழிலதிபர் பி.எஸ். அப்துர் ரஹ்மானின் உடல் இன்று மதியம் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அடக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருந்ததால் இருமுறை ஜனாஸா தொழுகை நடந்தது.

அதே போல துபாயிலும் அவருக்காக இன்று சிறப்புத் தொழுகை நடந்தது. துபாய் சலாஹூதீன் சாலையில் உள்ள அஸ்கான் ஹவுஸில் 3வது மாடியில் உள்ள தொழுகைப் பள்ளியில் நடந்தது.

பிரார்த்தனை தொழுகையை தைக்கா அப்துல் ரஹ்மான் நடத்தினார். சுலைமான் மஹ்லரி ஆலிம் இறை வேண்டுதல் செய்தார். இ.டி.ஏ. அஸ்கான் ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள், மற்றும் துபை வாழ் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு மறைந்த பெரியவருக்காக இறை வேண்டுதல் செய்து தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ். எஸ். மீரான், டி.பி.எஸ். சாகுல் ஹமீது, நியாஸ் அலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
முன்னதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அப்துர் ரஹ்மானின் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரபல கல்வியாளர், தொழிலதிபர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் நேற்று மாலை சென்னையில் காலமானார். சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் உள்பட பல கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், அறக்கட்டளைகளின் நிறுவனர் அப்துர் ரஹ்மான்.

மேலும் துபாயின் பிரபலமான ஈடிஏ குழுமத்தின் இணை நிறுவனரும் கூட. இதன் மூலம் வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான தமிழகத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவர். நேற்று மாலை அவர் காலமானார்.

அவரது உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் ஸ்டாரின். இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், ஹாஜி பி.எஸ். அப்துர்ரஹ்மான் அவர்கள் தன் சொந்த முயற்சியினால் உழைத்து முன்னேறியவர். கொடைவள்ளலாகத் திகழ்ந்த அவர் இந்தியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் இன்று மட்டுமல்ல என்றும் நினைவிலிருந்து அகலாது.
அவரது மறைவால் வாடும் அவர் குடும்பத்திற்கும், அவருடைய நிறுவனத்தில் பணிபுரிவோர் மட்டுமின்றி அவரை தந்தையாகவும், வழிகாட்டியாகவும் கருதிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை இந்த நேரத்தில் தெரிவி்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications