மஞ்சள் சாமந்தி மாலைகள் போர்த்திய ரதத்தில் நடராஜன் உடல் இறுதி யாத்திரை
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் அடக்கம் செய்வதற்கான இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது.
Recommended Video
தஞ்சாவூர்: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது. உறவினர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர். விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே திராவிட முறைப்பட அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
அப்போது அவருடைய சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழந்ததால், உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 16ஆம் தேதியன்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்படவே தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.
ஸ்டாலின் அஞ்சலி
நடராஜன் உடல் பெசன்ட் நகர் பாரி தெருவில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடராஜன் உடலுக்கு வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
டிடிவி தினகரன் அஞ்சலி
நடராஜனின் சகோதரர்கள் சாமிநாதன், ராமச்சந்திரன், பழனிவேலு மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி விவேக், அவருடைய சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகீலா, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., டாக்டர் சிவக்குமார் உள்பட அவருடைய குடும்பத்தினர் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உடல் எம்பாமிங்
இதனைத் தொடர்ந்து நடராஜன் உடல் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அருளானந்தம் நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சசிகலா கண்ணீர்
சசிகலா நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் நேற்று மதியம் கார் மூலம் தஞ்சைக்கு வந்தடைந்தார். கணவரின் உடல் அருகே சோகமாக கண்ணீருடன் அமர்ந்திருந்தார் சசிகலா.
சொந்த ஊரில் அடக்கம்
பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்குப் பின்னர் மாலை 4.30 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. உள்ளூர்வாசிகளும், அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர். மஞ்சள் சாமந்தி மாலைகள் போர்த்திய வாகனத்தில் நடராஜன் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. ம. நடராஜனுக்கு சொந்தமான நிலம் விளாரில் உள்ளது. அங்குள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நடராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.