ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று உடனடியாக பணிக்குத் திரும்புங்கள்... ஹைகோர்ட் கடும் எச்சரிக்கை!
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டிஸ் அளித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
Recommended Video
சென்னை: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்குத்திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். அரசுடன் நடந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில் நேற்று மாலையே பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இரவு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அவசர வழக்கு
பொது போக்குவரத்து நிறுத்தத்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாராகி என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வாதாடினார். இதனையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு அளிக்க ஒப்பு கொண்ட நிலையிலும் 34 சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன, 10 சங்கங்கள் இதனை புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்கின்றன என்றார்.
நீதிமன்றம் எச்சரிக்கை
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கம் கேட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்தனர். மேலும் பணிக்கு வர மறுக்கும் தொழிலாளர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
பொதுமக்கள் நலனுக்காக
பொதுமக்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இருப்பவர்கள் திடீர் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், செலியிர்கள் வேலைநிறுத்தத்தின் போது நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவுகளையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
பணிக்குத் திரும்ப உத்தரவு
இதனனிடையே இந்த வழக்கில் இறுதி உத்தரவு வழங்கிய நீதிபதிகள் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு பணிக்குத் திரும்பாத நிலையில் ஒழுங்கு நடவடிக்கை, பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் போக்குவரத்து ஊழியர்களின் விளக்கத்தையும் கேட்டு வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.