ஓய்வு பெற்ற அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் ஓ.பி.எஸ். தலையீடு? டிஜிபி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
மதுரை : ஓய்வு பெற்ற அதிகாரி தாக்கப்பட்ட விசாரணையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலையிடுவதாக தொடரப்பட்ட வழக்கில் டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே மலையாண்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சீனிச்சாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது..
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். ஆண்டிப்பட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டியில் உள்ள அரசுடமை வங்கியில் கடனை செலுத்தி நகையை திருப்ப சென்றபோது, வங்கி கள அலுவலர் பூலோகசுந்தர், முதலில் விவசாயக்கடனை செலுத்தி விட்டு, நகையை திருப்பும்படி கூறி என்னை தாக்கி, காயப்படுத்தினார்.
இதுதொடர்பான வழக்கில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலையீட்டால், சில பிரிவுகளை நீக்கினர். நீதிமன்றம் உத்தரவிட்டும் பூலோகசுந்தரை சிறையில் அடைக்காமல் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே பூலோகசுந்தருக்கு முதலில் ஜாமீன் மறுத்த மாஜிஸ்திரேட், நிதியமைச்சர் ஓபிஎஸ்சின் தலையீட்டால் ஜாமீன் வழங்கியுள்ளார்.
எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனு குறித்து டிஜிபி, தென்மண்டல ஐஜி, தேனி எஸ்பி, ஆண்டிப்பட்டி டிஎஸ்பி, சிபிஐ இன்ஸ்பெக்டர், ராஜதானி இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.