'என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’... 3 பெண்கள் குடுமிபிடி: வேதனையில் இளைஞர் தற்கொலை!
மதுரை: மதுரை அருகே இளைஞர் ஒருவரை, 3 பெண்கள் தன்னுடைய கணவர் எனக் கூறி குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சண்டையால் மனமுடைந்த சம்பந்தப்பட்ட இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (35), அங்குள்ள மசாலா கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சத்தியா. இவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், வீடு வீடாகச் சென்று மசாலா பாக்கெட்டுக்களை வினியோகித்து வந்த மணிகண்டனுக்கு அவனியாபுரம் பகுதியில் பொன்முத்து, ரகமத் ஆகிய 2 பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் தெரியாமல் அவர்களுடன், மணிகண்டன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் இந்த விஷயம் முதல் மனைவி சத்தியாவுக்கு தெரியவரவே, அவர் கணவரை கண்டித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களின் வீட்டுக்கும் சென்று ‘‘என் கணவருடன் எப்படி தொடர்பு வைத்துக் கொள்ளலாம்?'' என்று கூறி சந்தியா தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 24-ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
மணிகண்டனை நான் தான் முதலில் திருமணம் செய்துள்ளேன் என்று கூறி 3 பேரும் குடுமிபிடி சண்டை நடத்தியுள்ளனர். இதனை பார்த்து மனவேதனையடைந்த மணிகண்டன் வீட்டுக்கு சென்றதும், உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.