தங்கநகைக்காக குழந்தையைத் தூக்கிச் சென்ற தந்தை... கோர்ட்டில் போராடி குழந்தையை மீட்ட தாய்
மதுரை: தங்க நகைகளுக்குப் பதிலாக வெள்ளி நகைகளைப் போட்ட கோபத்தில் 9 மாத குழந்தையைத் தூக்கிச் சென்ற கணவருக்கு எதிராக கோர்ர்டில் வழக்குத் தொடர்ந்து போராடி தன் குழந்தையை மீட்டுள்ளார் மதுரைப் பெண் ஒருவர்.
மதுரை தத்தனேரி மெயின் ரோடு பாரதிநகரைச் சேர்ந்த ஜெயந்தி என்ற 23 வயது பெண்ணிற்கும், தூத்துக்குடி நாகலாபுரம் புதூரைச் சேர்ந்த டிரைவர் பழனி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மதுரை அரசு மருத்துவமனையில் ஜெயந்திக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. பிரசவம் முடிந்து மீண்டும் கணவர் வீட்டிற்கு ஜெயந்தி திரும்பிய போது, ஜெயந்தியின் பெற்றோர் குழந்தைக்கு வெள்ளி நகைகள் அணிவித்து அனுப்பியதாகச் சொல்லப் படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பழனி தன் குழந்தைக்கு தங்க நகைகள் வாங்கித் தரச் சொல்லி ஜெயந்தியை வற்புறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து பெற்றோர் வீட்டிற்கு வந்த ஜெயந்தி அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி ஜெயந்தியின் பெற்றோர் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த பழனி, தனது 9 மாத குழந்தையை ஜெயந்தியிடமிருந்த பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
குழந்தையைப் பிரிந்த ஜெயந்தி சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாய்ப்பால் மட்டுமே குடித்து வரும் தனது குழந்தையை மீட்டுத் தரும்படி கோரப் பட்டிருந்தது. இல்லையேல், குழந்தையின் உடல்நிலை மோசமாகி விடும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பழனியை குழந்தையுடன் கோர்டில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன் பேரில் குழந்தையுடன் ஆஜரானார் பழனி. விசாரணையின் போது, தாய்ப்பால் தராததால், தனது உடலும் தன் குழந்தையின் ஆரோக்கியமும் பாழாவதாக தெரிவித்தார் ஜெயந்தி.
அதனைத் தொடர்ந்து, குழந்தையை தாயார் வசம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது. மேலும், குழந்தையின் நலம் கருதி பெற்றோர்கள் சேர்ந்து வாழ ஆலோசனையும் கூறப்பட்டது. வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது இந்த வழக்கு விசாரணை. அன்றைய தினம் பழனி, ஜெயந்தி இருவரும் சேர்ந்து வாழ்வது குறித்து முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications