ராஜபக்சே போர் நாயகன் என சித்தரித்த இலங்கை அமைச்சர். சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த முடியாது என பேட்டி
சென்னை : போர் நாயகனாக மக்கள் கருதுவதால் ராஜபக்சேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று இலங்கை அமைச்சர் ராஜித சேனரத்ன கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இலங்கையின் மூத்த அமைச்சரும், அமைச்சரவை செய்தி தொடர்பாளருமான ராஜித சேனரத்ன அளித்த பேட்டியில் கூறியதாவது...

கேள்வி : இலங்கையின் சிறிசேனா - ரனில் அரசு மகிந்த ராஜபக்சேவை எப்படி பார்க்கிறது? போர் குற்றவாளியாகவா? போரை முடிவுக்கு கொண்டுவந்த போர் நாயகனாகவா?
பதில் : இலங்கை மக்கள் ராஜபக்சேவை போர் நாயகனாகவே கருதுகிறார்கள். அதனால் தான் அவருக்கு நாடு முழுவதும் ஆதரவு இருந்தது. இதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். குற்றங்கள் நடந்திருக்கலாம். என்னை பொறுத்தவரை போர்க்குற்றம் என்ற ஒன்று இல்லவே இல்லை. போரே குற்றம்தான். அதனால் தான் போருக்கு எதிரானவர்களாக நாங்கள் இருக்கிறோம்.
ஆனால், சில சூழல்களில் போர் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அல்-கொய்தாவை ஒழிப்பதற்கு போர் ஒன்றே தீர்வு என்பதை நாங்கள் ஏற்கிறோம். தலிபானை அழிப்பதிலும் போரைத் தவிர வேறு வழியில்லை.
இறுதிக்கட்டத்தில் எல்.டி.டி.ஈ. (விடுதலைப்புலிகள் இயக்கம்) பொறுத்தவரையிலும் அதே நிலைதான் ஏற்பட்டது. முந்தைய கட்டத்தில், அன்றைய ரனில் விக்ரமசிங்கே அரசின் நல்லிணக்கம் மற்றும் அமைதி முயற்சிகளை விடுதலைப் புலிகள் தடுத்து, ரனிலை வீழ்த்த மகிந்த ராஜபக்சேவை ஆதரித்தார்கள். ஆக விடுதலைப்புலிகள் போரையே விரும்பியதை காட்டுகிறது. அவர்கள் அமைதியை விரும்பவில்லை.
கேள்வி : உங்கள் நாட்டின் மற்ற பலர் கருதுவது போல உங்களுடைய அரசும் ராஜபக்சேவை போர் நாயகனாகவே கருதுகிறதா?
பதில் : போர்க்குற்றங்கள் எல்லாம் அதிபர் ராஜபக்சேவுக்கு தெரிந்துதான் நடந்தது என்று எப்படி சொல்ல முடியும்? படைகளின் தலைவர் ஜனாதிபதி தான். ஆனால், அவர் நாட்டின் தலைவரும் கூட. ஏதோ சில படைப் பிரிவுகளின் தளபதிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், ஜனாதிபதிக்கு எப்படித் தெரிந்திருக்கும்? சித்ரவதை மையங்களை சிலர் நடத்தியிருந்தால், ஜனாதிபதிக்கு சொல்லித்தான் செய்திருப்பார்கள் என்று கூறமுடியுமா? முடியாது. ஒரு பெரிய போர் நடக்கும்போது அந்நாட்டின், இதுபோன்ற எல்லா தகவல்களையும் அதிபர் அறிந்து வைத்திருக்க முடியுமா?
கேள்வி : இவை ஏன் எழுப்பப்படுகிறது என்றால், மேல் இருந்து கீழ் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இந்த குற்றங்கள் நடத்தப்பட்டன என ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பதில் : அதுபோன்று நடந்திருக்கலாம். ஆனால், ஜனாதிபதி உத்தரவிட்டு அவை நடந்திருக்கும் என கூறமுடியாது. ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கலாம்.
கேள்வி : ராஜபக்சேவை ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
பதில் : இல்லை, முடியாது. எந்தவிதமான சர்வதேச விசாரணைக்கும் அவரை உட்படுத்த முடியாது. நான் ராஜபச்சேவுக்கு ஆதரவானவன் இல்லை. அவரை பல வகைகளில் எதிர்ப்பவன் நான். ஆனால், அவரை எந்தவிதமான சர்வதேச விசாரணைக்கும் உட்படுத்த முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு இலங்கை அமைச்சர் ராஜித சேன ரத்ன கூறியுள்ளார்.
இறுதிகட்ட போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கை அமைச்சரின் ராஜபக்சேவுக்கு ஆதுரவான கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications