பைக்கில் பந்தாவாக 'பிரஸ்' ஸ்டிக்கருடன் உலாவந்த சேலம் வாலிபருக்கு ரூ.800 அபராதம்
சேலம்: பைக்கில் 'பிரஸ்' என்று ஸ்டிக்கர் ஒட்டியபடி சுற்றிய நபருக்கு ரூ.800 அபராதம் விதித்துள்ளனர் சேலம் மாநகர போலீசார்.
சேலம், நகரில் உள்ள ஆனந்தாபாலம் அருகே, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில், 'பிரஸ்' என்ற ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு பைக் வேகமாக சென்றது. சந்தேகத்தின்பேரில் அதை வழிமறித்த போலீசார், வாகனம் ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த நபர், நெய்காரன்பட்டி பகுதியை சேர்ந்த, சுந்தரநாரயணன் (27) என்பதும், இவர் பத்திரிகையாளர் கிடையாது என்பதும் உறுதியானது.
இதையடுத்து, விதிமுறை மீறி வாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிச் சென்ற காரணத்துக்காக சுந்தர நாராயணனுக்கு ரூ.800 அபராதம் விதித்ததுடன், இனிமேல் பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஓட்டக்கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தார்.
சேலம்போலவே, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், பத்திரிகையாளர் அல்லாதோரும், முன்னாள் பத்திரிகையாளரும் கூட பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டி பைக், கார்களில் செல்கின்றனர். போலீசாரும் அவர்களை எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், ஒவ்வொரு பத்திரிகையிலும் சில மூத்த நிருபர்களுக்கு அரசே அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் என்ற அந்தஸ்தை வழங்குகிறது. அவர்களுக்கு அரசு சின்னத்துடன் கூடிய வாகன பாஸ் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.