ஈரோடு ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சத்துடன் ஒருவர் கைது: ஹவாலா பணமா?
ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சத்துடன் வாலிபர் ஒருவர் போலீசில் பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்தது ஹவாலா பணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் இரவு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வந்தனர். அப்போது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த நபர் சந்தேகப்படும்படி இருந்தார். அவரை போலீசார் அழைத்தபோது தனது கையில் இருந்த பையை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை விரட்டிப் பிடித்தனர்.

அவர் கீழே போட்ட பையை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.30 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அந்த நபர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புத்தூரைச் சேர்ந்த அர்சத்(35) என்பது தெரிய வந்தது.
பணம் குறித்து போலீசார் அவரிடம் கேள்வி கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்சத்தை கைது செய்தனர்.
கேரளாவில் உள்ள தனது தந்தையிடம் அளிக்குமாறு கல்லூரி மாணவர் ஒருவர் அந்த பணத்தை அளித்ததாக அர்சத் தெரிவித்துள்ளார். பணத்தை கொடுத்த கல்லூரி மாணவர் யார், அந்த பணம் ஹவாலா பணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications