பணம், நகைக்காக இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற அஜீத் - பரபரப்பு வாக்குமூலம்
நர்சிங் மாணவி வேல்விழியை நகைக்காக கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அஜித்குமார் போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நர்சிங் மாணவி வேல்விழியை நகைக்காக கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அஜித்குமார் போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார். மனைவிக்கு பணம் தருவதற்காக மாணவியை கொன்று நகையை பறித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்
சென்னை சூளைமேடு பகுதியில் வீரபாண்டி நகரில் வசித்தவர் வேல்விழி,19. நர்சிங் டிப்ளமோ படித்து வந்தார். இவரது சொந்த ஊர் விருத்தாச்சலம். படிப்பதற்காக சென்னை சூளைமேட்டில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி தனது தந்தையுடன் கடைசியாக பேசிய வேல்விழி அதன் பின்னர் தொடர்பற்று போனார். அவரது செல்போனும் சுவிட் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த அவர் சென்னையில் வேல்விழி தங்கி இருந்த இடத்தில் வந்து விசாரித்தார்.

தேடிய தந்தை
வேல்விழியைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்பதால் வேல்விழியை கண்டுபிடித்து தரும்படி அவரது தந்தை ராஜேந்திரன் சூளைமேடு காவல்நிலையத்தில் கடந்த 9ஆம் தேதி புகார் அளித்தார். புகாரைப்பெற்ற போலீஸார் அவர் காணாமல் போனது குறித்து வேல்விழி வசித்த குடியிருப்பு, அவர் பணியாற்றிய நர்சிங் ஹோம் பகுதியில் விசாரித்தனர்.

நர்சிங் மாணவி வேல்விழி
வேல்விழியின் அக்கம் பக்கம் வசிப்பவர்களையும் விசாரித்தனர். அப்போது வேல்விழியுடன் நர்சாக பணியாற்றும் மகாலட்சுமி என்பவரின் கணவர் அஜித்குமார் என்பவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அஜித்குமார் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித்குமாரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

சாக்கு மூட்டையில் உடல்
ஆரம்பத்தில் மறுத்த அவர் காவல்துறையினரின் கவனிப்பில் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தில் வேல்விழியை கொன்றது நான் தான் என ஒப்புக்கொண்டார். வேல்விழியை கொன்று அவரது உடலை சாக்குமூட்டையில் வைத்து ஒரு வாடகை ஆட்டோ பிடித்து கோயம்பேடு கொண்டுச்சென்றேன். அங்கு மின்சார கேபிள்களை சுற்றும் பெரிய உருளையில் திணித்து விட்டு வந்து விட்டதாக கூறினார்.

அழுகிய உடல் மீட்பு
அஜீத்தை அழைத்துக்கொண்டு அங்குச்சென்ற காவல்துறையினர் அவர் அடையாளம் காட்டிய இடத்தில் சாக்குமூட்டையில் வைத்து திணிக்கப்பட்டிருந்த வேல்விழியை மீட்டனர். உடல் பலநாட்களாக கட்டப்பட்டு இருந்ததால் அழுகி துர்நாற்றம் வீசியது. உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித்குமாரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மனைவியின் தோழி
அஜித்குமார் பாலக்காட்டை சேர்ந்தவர். மூன்று மாதத்திற்கு முன் சென்னைக்கு வந்துள்ளனர். அஜித்குமாரின் மனைவி மகாலட்சுமி விருகம்பாக்கத்தில் நர்சாக பணியாற்றுகிறார். அவருடன் வேல்விழியும் பயிற்சி நர்சாக பணியாற்றிவந்தார். நர்சிங்ஹோம் அனைவருக்கும் சூளைமேட்டில் ஒரே குடியிருப்பில் இடம் பிடித்து தங்க வைத்துள்ளது. அஜித்குமார் சோம்பேறி, வேலைக்கு போகாமல் ஊர்சுற்றி வருகிறார். இரண்டு மாதம் அங்கே இங்கே கடன் வாங்கி மனைவியிடம் சம்பளம் என்று கொடுத்துள்ளார்.

திட்டிய வேல்விழி
மூன்றாம் மாதம் சம்பளம் கொடுக்க கடன் யாரும் தரவில்லை. கடந்த 6ஆம் தேதி ரூமில் தனியாக இருந்த வேல்விழியிடம் பணம் கடனாக கேட்டபோது அவர் தரவில்லை, கழுத்தில் உள்ள செயின் அல்லது செல்போனை கொடு நான் இரண்டு மாதத்தில் திருப்பி தருகிறேன் என்று கேட்ட போது வேல்விழி திட்டியுள்ளார். வேல்விழி கேவலமாக பேசியதால் ஆத்திரமடைந்த அஜீத், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். உடலை தனது அறைக்கு கொண்டு வந்த அஜீத், மளிகைக்கடையில் பிளாஸ்டிக் சாக்கு ஒன்றை வாங்கி அதில் உடலை திணித்து தைத்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கோயம்பேட்டிற்கு சரக்கு கொண்டு போவது போல் கொண்டுச்சென்றுள்ளார்.

அப்பாவி பெண் மரணம்
பின்னர் வேல்விழி கழுத்தில் இருந்த இரண்டு சவரன் செயினை அரும்பாக்கத்தில் உள்ள நகைக்கடையில் விற்று மனைவியிடம் சம்பளம் பணம் போல கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை செலவு செய்துள்ளார். வேல்விழியை தேடும்போது அஜித்குமாரும் அப்பாவி போல் தேடியதுதான் கொடுமையான விசயம். போலீசின் விசாரணையில் உளறிக்கொட்டிய அஜீத் மாட்டிக்கொண்டார். படிப்பிற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்த அப்பாவி பெண் வேல்விழி, பண ஆசை பிடித்த சோம்பேறி ஒருவனின் கையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்பதுதான் சோகம்.












Click it and Unblock the Notifications