ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மெரினாவில் போராட்டமா? சாலைகளுக்கு சீல்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாகத் தகவல் பரவியதால் மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் மெரினாவில் கூட இருப்பதாகத் தகவல் பரவியது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் கிராம மக்கள் 2ம் கட்டப் போராட்டத்தை ஏப்ரல் 12-ம் தேதி துவக்கினர். 100 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகள், பெண்கள் போராடி வருகின்றனர்.
கிராம மக்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், மெரினா கடற்கரை சாலையில் 200-க்கும் மேற்பட்டட போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தை போன்று நெடுவாசல் கிராம மக்களுக்காகப் போராட்டம் நடைபெற்றுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கைக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரை சாலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மெரினாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன.