Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“உங்க வயித்தெரிச்சல் புரியுது..” அன்புமணி ராமதாஸுக்கு மயிலாடுதுறை எம்.பி சுதா சரமாரி பதிலடி!

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: தொடர்ந்து மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு மயிலாடுதுறை எம்.பி சுதா பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது என "சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை ஜெயிக்க வைத்துள்ளீர்கள்" என மயிலாடுதுறை எம்.பி சுதா பற்றி பாமக தலைவர் அன்புமணி பேசியதற்கு அத்தொகுதி எம்.பி. சுதா பதிலடி கொடுத்துள்ளார்.

PMK Anbumani Ramadoss Sudha

நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது, "எங்கிருந்தோ வந்தவரை வெற்றி பெற வைத்துள்ளீர்கள்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார். இந்த நிலையில் அவரது பேச்சுக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா பதில் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சுதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று 23 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அவற்றையெல்லாம் பேசுவதை விட்டு விட்டு, தேவையில்லாமல் என்னைப் பற்றி பேசும் போது, இந்த தொகுதிக்கு சம்மந்தமில்லாத சென்னையிலிருந்து யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார் என்றும், தெரியாமல் வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள் என்றும் பேசியது, தொடர்ந்து சமுதாய மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது.

ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசியதன் மூலம் நீங்கள் யார், நீங்கள் பெண்களை எந்த அளவிற்கு மதிக்கின்றீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள் இதுதான் உங்களது பண்பும் கூட. சென்னையில் பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி சௌமியா அன்புமணி மற்றும் நீங்கள் தருமபுரியில் நிற்கலாம். சென்னையில் வசித்து இன்று மயிலாடுதுறையில் நிரந்தரமாக குடியேறிய நான் மயிலாடுதுறையில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் பெரும் குற்றமா?

உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஒரு நீதி, அடுத்தவர் வீட்டுப் பெண்களுக்கு ஒரு நீதியா? இதுதான் நீங்கள் கற்றுக் கொண்ட, கற்றுக் கொடுக்கும் சமூக நீதியா? நான் காங்கிரஸ் கட்சியில் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். வழக்கறிஞர் பிரிவில் மாநில அளவிலும், பிறகு மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் என்று கட்சியில் 20 ஆண்டுகள் கடுமையாக உழைத்து எவ்வித பின்புலம் இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.

அப்படி எங்காவது அன்புமணி ராமதாஸ் ஆகிய நீங்கள், மத்திய அமைச்சர் ஆவதற்கு முன்பு, ஏழை வன்னியர் சமூக மக்களின் நலனுக்காக எங்காவது பேசியது உண்டா? போராடியது உண்டா? சிறை சென்றதுண்டா? வன்னியர் மக்கள் நலனுக்காக பாடுபட்டு, தனது சொத்தை இழந்து, பல வழக்குகளை எதிர்கொண்டு, சிறை சென்று, பல வன்னியர் அறிவார்ந்த பெருமக்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தும், ராமதாஸ் மகன் என்ற ஒரு தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் இல்லாமல் மத்திய அமைச்சராகியுள்ளீர்கள்.

நான் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி தான் காரணம். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, நாடு முழுவதும் மக்களை மதம், சாதி என்ற வெறுப்புணர்வை தூண்டி அரசியல் ஆதாயம் பெறுகிறார்கள். இதை மாற்றி மக்களை அன்பால் பிணைக்க வேண்டுமென்ற உன்னதமான நோக்கத்திற்காக ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. தூரம் 5 மாதங்களாக நடந்தே சென்றதை நாடே அறியும். அந்த நடை பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்டேன் என்பது ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கும் உங்களுக்கு தெரியாதா?

உங்களைப் போன்றவர்கள் அப்பாவி மக்களை சாதியால் பிரித்து அரசியல் செய்கிறீர்கள், அந்த அடிப்படையில் தான் நீங்கள் இன்று வரை கொள்கை ரீதியாக ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணியில் பயணிக்கிறீர்கள். ஒரு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில், அது நிறைவேறப் போவதில்லை.

அதேசமயம், மத்தியில் காங்கிரஸ் கட்சி மன்மோகன்சிங் தலைமையில் ஆட்சி செய்தபோதுதான் வன்னியர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உங்களை மத்திய கேபினட் அமைச்சராக்கினார்கள். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நீங்கள் விதிமுறைகளை மீறி இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்ததாகவும், அதற்காக உங்கள் மீது சிபிஐ வழக்கு இருப்பதாகவும் ஊடகத்தின் வாயிலாக காண முடிந்தது.

வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டதின் நோக்கம், ஏழை வன்னியர்களின் நலன் மற்றும் இடஒதுக்கீடு பெற வேண்டும் என்பது தான். அந்த அடிப்படையில் தான் அன்றைய காலகட்டத்தில் அனைத்து கட்சியிலும் இருந்த வன்னியர்கள் தங்களின் ஆதரவையும், பொருளுதவியையும் அளித்தனர். அப்படி இடம் மற்றும் பொருளுதவி வழங்கியதில் எனது மாமா லோகநாதன், மகளிர் அமைப்பு தலைவி சாவித்ரி அம்மாள் ஆகியோர் முதன்மையானவர். இந்த வரலாறெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முடிந்தால் உங்கள் தந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தனது அரசியல் பொது வாழ்க்கையில் மிகவும் நேர்மையானவராகவும், உண்மையாகவும், எளிமையானவராகவும் லட்சக்கணக்கான வன்னியர் மக்களுக்கு பாடுபட்ட காடுவெட்டி குரு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய போது ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச தொகையை கட்டினால் அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி காப்பாற்றி விடலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகவும், அதற்கு நீங்கள் உதவவில்லை, அதன் விளைவு காடுவெட்டி குரு இறந்து விட்டார் என்ற குற்றச்சாட்டை இன்றுவரை அவரின் தாய், மனைவி, பிள்ளைகள் முன் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்காமல் மௌனம் காப்பது ஏன்? இதுதான் உங்கள் வன்னியர் சமூகப் பற்றா ? இந்த கேள்வியும், வருத்தமும் லட்சக்கணக்கான வன்னியர் மக்கள் மனதில் ஆறாத வடுவாக இருப்பதை உங்களால் மறுக்க முடியுமா?

10 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு தமிழ்நாட்டின் மொத்த உரிமைகளையும் பறித்து வளர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்கி, கேலி செய்து கொண்டிருந்தது பாஜக. அந்த பாஜகவிற்கு வக்காலத்து வாங்கித்தானே நீங்களும், உங்கள் கட்சியும், உங்கள் வேட்பாளரும் களத்தில் நின்றீர்கள்?

இந்தியாவில் வாழும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக எண்ண வைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கூட்டணி தர்மத்திற்காக ஆதரித்தீர்களே நினைவிருக்கிறதா? பாஜகவிற்கு முட்டுக் கொடுக்க கூட்டணி தர்மம் என பெயர் வைத்து அதே பாஜகவை தோளில் சுமந்து வந்தால் மக்கள் உங்களை ஏன் ஏற்க வேண்டும்? ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என எடுக்க நினைத்து டெல்டாவை சுடுகாடாக்க நினைத்த பாஜக வேஷத்தில் வந்த உங்களை டெல்டா மக்கள் வரவேற்பார்கள் என எதிர்பார்க்கும் அளவிற்குத்தான் உங்கள் அரசியல் புரிதல் இருக்கிறதா?

நீட் தேர்விற்கு தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டுமென ஒரே குரலில் எல்லோரும் கேட்டோம். நீங்களும் கேட்டீர்கள். உங்கள் கட்சியினர் இருந்த மேடையிலேயே நீட் விலக்கு கிடையாது என்று சொன்ன பாஜகவுடன் தொடர்ந்து மூன்று தேர்தல்களாக கூட்டணி வைத்த உங்களை தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஏற்பார்கள்?

மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை செயல்படவிடாமல் தொந்தரவு செய்த போதெல்லாம், ஆளுநருக்கு எதிராக வலிமையான கருத்தை தெரிவிக்காமல், பாம்பும் சாகக் கூடாது தடியும் உடையக் கூடாது என்று நீங்கள் எடுத்த இரட்டை நிலைப்பாட்டை மக்கள் மறந்திருப்பார்களா?

இந்தியாவில் 150 ஆண்டுகள் பெருமை வாய்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வழக்கறிஞர்களை கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சுதா என்றால் அனைத்து வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் நன்று தெரியும். சென்னை உயர்நீதிமன்ற தேர்தலில் ஆண்கள் மத்தியில் போட்டியிட்டு நூலகர் பொறுப்பு செயலளர், துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக 10 ஆண்டுகளாக இருந்து ஊடகங்களில் பேசி வருகிறேன். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஊடகத்தின் வாயிலாக என்னை பார்த்ததாக என்னிடமே கூறி வருகிறார்கள். இவ்வளவுக்கும் உரியவரான என்னை யாரோ ஒருவர். எந்த ஊர் என்று தெரியவில்லை என்று நீங்கள் பொதுக்கூட்டத்தில் பேசிகிறீர்கள் என்றால் ஒரு கட்சியை வழிநடத்தும் தலைமைப் பண்பை தாங்கள் பெறவில்லை என்பதைத் தான் காட்டுகிறது" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+