மயிலாடுதுறையில் போலீஸ் குடியிருப்புக்கு தனியாக அழைத்து.. 16 வயது பெண்ணிடம் அத்துமீறிய காவலர் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் திருநாவுக்கரசு, போலீஸ் குடியிருப்புக்கு அருகே வசிக்கும் 16 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அத்துமீறி உள்ளார். இந்த விவகாரத்தில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 34 வயதாகும் திருநாவுக்கரசு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். திருநாவுக்கரசுக்கு கல்யாணம் ஆகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். திருநாவுக்கரசு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

காவலரான திருநாவுக்கரசு, போலீஸ் குடியிருப்புக்கு அருகே வசிக்கும் ஒருவருடன் பழகி உள்ளார். அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் மொபைல் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசின் நண்பருக்கு ஒரு மகள் உள்ளார். அந்த சிறுமிக்கு 16 வயது ஆகிறது.
இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கும், நண்பரின் மகளான சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியை காதல் என்ற பெயரில் வலையில் வீழ்த்திய திருநாவுக்கரசு, இதையடுத்து யாரும் இல்லாத நேரத்தில் கடந்த ஜூலை 8-ந்தேதி வீட்டிற்கு அழைத்துள்ளார். காவலர் குடியிருப்புக்கு வரவழைத்த திருநாவுக்கரசு அவரிடம் வலுக்கட்டாயமாக அத்துமீறி உள்ளாராம். பலாத்காரம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, மாவட்ட குழந்தைகள் உதவி மையத்துக்கு புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் திருநாவுக்கரசு மீது, பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ்காரர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்தார்.












Click it and Unblock the Notifications