மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
மதுரை: மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
அன்று முதல் மதுரையின் அரசியாக மீனாட்சி திகழ்ந்து வருகிறார். சனிக்கிழமை திக்கு விஜயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று திருக்கல்யாணம்
இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்தனர்.

திருமண மண்டபத்துக்கு வருகை..
பின்னர் அங்கிருந்து கிழக்கு கோபுர வாசல் அருகே உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்தனர். இந்தத் திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளினர்.

அலங்கார மேடைக்கு வருகை
பின்னர் கோயிலுக்குள் வலம் வந்த அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் காலை மணியளவில் ஒருவர் பின் ஒருவராக மேல ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைந்துள்ள அலங்கார மணமேடைக்கு வந்தனர். அப்போது, மீனாட்சிக்கு வண்ணப் பட்டும், சுந்தரேஸ்வரருக்கு வண்ணப் பட்டும் அணிவிக்கப்பட்டிருந்தன.

முத்துக் கொண்டையில் மணப்பெண்
மணப் பெண் மீனாட்சி முத்துக்கொண்டை போட்டு வைரக்கிரீடம், மாணிக்க மூக்குத்தி, தங்கக்காசு மாலை, ஒட்டி யாணம் உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்திருந்தார்.பின்னர் மந்திரங்கள் முழங்க திருமணச் சடங்குகள் தொடங்கின. மணமக்கள் சார்பில் கோயில் சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டப்பட்டது.

மாலை மாற்றிய அம்மனும் சுவாமியும்
இதையடுத்து ஹோமம், மாங்கல்ய பூஜைகள் நடைபெற்ற பின் அம்மனும், சுவாமியும் மாலை மாற்றிக் கொண்டனர். பல்வேறு பூஜைகளுக்கு பின் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து பக்தர்களுக்கு எடுத்துக் காட்டினர்.

திருமாங்கல்யம் அணிவிப்பு
நிறைவாக மங்களவாத்தியம் முழங்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.திருமணம் முடிந்தவுடன் கூடியிருந்த பெண்கள் தாலியில் சந்தனம், குங்குமம் வைத்தும், நெற்றியில் பொட்டும் வைத்துக் கொண்டனர்.

மஞ்சள் கயிறு மாற்றிய பெண்கள்
சில பெண்கள் மீனாட்சிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட நேரத்தில் தாங்களும் புதுத்தாலி, மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்ககான பக்தர்கள் திரண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications