ஜெ.விற்கு சரியான நேரத்தில் சசிகலா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை... அமைச்சர் கே.சி.வீரமணி பரபர!
ஜெயலலிதாவிற்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு சசிகலா ஏற்பாடு செய்யவில்லை என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
வேலூர் : ஜெயலலிதாவிற்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்திருக்க வேண்டாம் சரியான நேரத்தில் அப்பலோவிற்கு அழைத்து சென்றிருந்தாலே ஜெயலலிதாவை இன்னும் 10 ஆண்டுகள் நாம் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் என்றும் வீரமணி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், தமிழக வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் வீரமணி, கட்சிக்கே சம்பந்தமில்லாதவர்கள் அம்மாவால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள் குறிப்பாக டி.டி.வி தினகரனை 2008ம் ஆண்டிலேயே கட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார். ஜெயலலிதாவையே கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி
கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற டிடி.வி தினகரன் திட்டமிட்டார்.
தினகரன் சதி தெரிந்ததால்
தினகரனின் இந்த சதி தெரிந்ததால் ஜெயலலிதா அவர்களை விலக்கயே வைத்திருந்தார். கடைசி வரை அவர்களை கட்சியில் ஜெயலலிதா சேர்க்கவும் இல்லை.
ஆட்சியை பிடிக்க திட்டம்
கொள்ளைப்புறமாக வந்த அந்த கொள்ளைக்கார கூட்டம் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற துடிக்கிறது. மன்னார்குடி மாபியா கும்பல், கொஞ்சம் விட்டு இருந்தால் கட்சியை கைப்பற்றி இருப்பார்கள் என்றும் கூவத்தூரில் முதன்முதலாக, தான் குரல் கொடுத்து வெளியேறினேன்.
சசி மீது குற்றச்சாட்டு
இன்று ஸ்டாலின் லண்டன், சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள், உடல் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். சசகிலா நினைத்திருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம். வெளிநாட்டிற்கு அழைத்து சென்றிருக்க வேண்டாம், அப்பலோவிற்கு சரியான நேரத்தில் அழைத்து சென்றிருக்கலாம்.
ஜெ. உயிரோடு இருந்திருப்பார்
சசிகலா முறையாக ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து இருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருப்பார் என்றும் திட்டமிட்டே அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் மேலும் 10 ஆண்டுகள் நாம் அவரை பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் என்றும் வீரமணி கூறியுள்ளார்.