அரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து
தமிழக அரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. விமர்சனம் செய்யாதீர்கள் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அரசு முழு மரியாதை செலுத்தியிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை விமர்சனம் செய்யாதீர்கள் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார். அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடியிடம் நேரில் சென்று கேட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், மெரினாவில் நினைவிடம் கட்டுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கருணாநிதியை அடக்கம் செய்ய கிண்டி அண்ணா பல்கலை அருகே இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனாலும், திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி பெற்று அடக்கம் செய்தது. வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்காமல் போயிருந்தால் நானே வீதியில் இறங்கிப் போராடியிருப்பேன் என்று கூறினார்.
அதே போல, திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், வெட்கத்தைவிட்டு சொல்கிறேன். தலைவர் கருணாநிதியின் ஆசை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது அதை நிறைவேற்று ஒத்துழைக்க வேண்டும் என்று கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன். ஆனால், அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
மேலும், அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கு தமிழக காவல் துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இவ்வாறு, திமுக தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசு முழுமையான எல்லா மரியாதையும் செலுத்தியிருக்கிறது என்று நினைக்கின்றேன். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அவ்வளவு பெரிய கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் அரசு மரியாதையுடன் நடந்தது. இதற்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை அதை விமர்சனம் செய்வது தவறான முன்னுதாரணம்" என்று தெரிவித்தார்.