திருவாரூர் அரசு மருத்துவமனை லிப்டில் மாட்டிய அமைச்சர் ஓ.எஸ் மணியன்- கதவை உடைத்து மீட்பு
திருவாரூர் அரசு மருத்துவமனை லிப்டில் சிக்கி தவித்த அமைச்சர் ஓஎஸ்.மணியனை கதவை உடைத்து பாதுகாவலர்கள் மீட்டனர்.
திருவாரூர்: திருவாரூரில் அரசு மருத்துவமனை லிப்டில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் சிக்கி தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரைமணிநேர போராட்டத்திற்குப் பின்னர் லிப்ட் கதவை உடைத்து அமைச்சரை மீட்டனர்.
நாகையில் மீனவர்கள் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்தவர்கள் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், லோக்சபா உறுப்பினர் கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்க திருவாரூர் மருத்துவமனைக்கு சென்றனர்.
அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்களை மருத்துவக்கல்லூரி டீன், இரண்டாவது மாடிக்கு லிப்டில் அழைத்துச்சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக, லிப்ட் பழுதாகி, இடையில் நின்றுவிட்டது.
சுமார் 30 நிமிடங்கள் போராடி, லிப்ட் கதவுகளை உடைத்து, அந்தரத்தில் மாட்டிக்ககொண்டிருந்த அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, வெளியே வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.
அரசு மருத்துவமனை லிப்ட்டின் அவல நிலையை அமைச்சர் நேரடியாக உணர்ந்திருப்பார் என்று நோயாளிகள் பேசிக்கொண்டனர்.